இலங்கை சிங்கள தேசம் என்பதை ஏற்போருக்கே வாக்களிக்க வேண்டும்: பொதுபல சேனா
https://newsweligama.blogspot.com/2014/09/blog-post_92.html
சிங்கள பௌத்தர்களின் தேசம் இலங்கை என்பதை ஏற்றுக்கொள்பவர்களுக்கே ஊவா மாகாண சபைத்தேர்தலில் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பொதுபல சேனா வெண்டுகோள் விடுத்துள்ளது.
அவ்வாறான வேட்பாளர் தமிழராக, சிங்களவராக, முஸ்லிமாக இருந்தாலும் பிரச்சினையில்லை எனவும் பொதுபல சேனாவின் தேசிய அமைப்பாளர் விதாரன் தெனியே நந்ததேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பொதுபலசேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே விதாரன்தெனியே நந்த தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்ட விரோத வர்த்தகங்களில் ஈடுபடுவோருக்கு மக்கள் வாக்களிக்க கூடாது. உலகில் எங்கும் இல்லாத தேர்தல் கலாசாரம் இங்கு காணப்படுகின்றது.
ஒருவருக்கொருவர் சேறுபூசிக்கொள்வதும் வன்முறைகளும் கொலைகளும் என கீழ்த்தரமான தேர்தல் கலாசாரமே காணப்படுகின்றது.
எந்தவொரு தொழிலுக்கு இணைய வேண்டுமானால் அதற்கு கல்வித்தகைமை உட்பட வேறு தகுதிகள், குடும்ப பின்னணி தேவை. ஆனால், இங்கு அரசியல் செய்வதற்கு எந்தவிதமான கல்வி அறிவோ, தகுதியோ, குடும்ப பின்னணியோ தேவை இல்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கசிப்பு வியாபாரம் அல்லது போதைப்பொருள் வியாபாரம் என எந்தவிதமான சட்டவிரோத வர்த்தகம் செய்பவர்களாக இருந்தாலும் அவர்களால் இங்கு அரசியல் செய்ய முடியும்.
தேர்தலில் போட்டியிட முடியும். இந்நிலை மாற வேண்டும். அதனை மக்களாலேயே மாற்ற முடியும். எனவே, ஊவா மாகாண சபைத்தேர்தலில் தகுதியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்றும், எமது கலாசாரம் வரலாறு தெரிந்தவர்கள் எவராக இருந்தாலும் அவ்வாறான வேட்பாளர்கள் தமிழராக, சிங்களவர்களாக, முஸ்லிம் ஆக இருக்கலாம்.
இந்த நிலைப்பாடு கொண்ட வேட்பாளர்களை இத்தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும் என விதாரன் தெனியே நந்ததேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.