ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள் சிக்கிய ஏர்ஏசியா விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு
https://newsweligama.blogspot.com/2015/01/blog-post_48.html
ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள் சிக்கிய ஏர்ஏசியா விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது என்று இந்தோனேஷியா மீட்பு குழு தகவல் தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியா நாட்டின் சுரபவாவில் இருந்து சிங்கப்பூருக்கு கடந்த மாதம் 28-ந் தேதி 162 பேருடன் புறப்பட்டு சென்ற ஏர் ஆசியா விமானம், சிறிது நேரத்திலேயே மாயமானது. அது, ஜாவா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாக தெரியவந்தது. இதனை தொடந்து ஜாவா கடலில் தேடல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்றது. 40-க்கும் மேற்பட்டோர்களின் சடலங்கள் மீட்கப்பட்டது. விமானத்தின் சிதைவுகளை தேடி கண்டுபிடிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த விமானத்தின் வால்பகுதி ஜாவா கடலுக்கு அடியில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வால்பகுதியை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் கிரேன் உதவியுடன் கடலில் இருந்து மீட்கப்பட்டது. ஆனால் வால்பகுதியில் விமானத்தின் கடைசி தருணத்தில் நடந்தது என்ன என்பதை கண்டறிய உதவும் கருப்பு பெட்டியும், ஒலிப்பதிவு கருவிகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள் சிக்கிய ஏர்ஏசியா விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது என்று இந்தோனேஷியா மீட்பு குழு தகவல் தெரிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழுவிடம் இருந்து இன்று காலை அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று எனக்கு கிடைத்தது. நாங்கள் விமான தகவல் ரெக்கார்டர் என அழைக்கப்படும் கருப்பு பெட்டி ஒன்றை கடலில் இருந்து மீட்பதில் வெற்றிபெற்றுவிட்டோம். என்று மீட்புகுழு தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். நாங்கள் இன்னும் விமானிகள் அறையில், குரல் ரெக்கார்டர் அடங்கியிருக்கும் ஒலிப்பதிவு கருவியை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.