ஜனவரிக்கு முன் சகலருக்கும் மின்சாரம்! மின் கட்டணங்களை மேலும் குறைக்கவும் திட்டம்
https://newsweligama.blogspot.com/2014/09/blog-post_86.html
ஜனவரி மாதத்திற்கு முன் அனைத்து வீடுகளுக்கும் நூறு வீதம் மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மின்சார சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை இலங்கையில் 76.7 வீத வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது. இவ்வாண்டில் அது 97வீதமாகியுள்ளது நாட்டில் 2412 மெகாவாட்ஸ் மின்சாரமே தேசிய மின்கட்டமைப்பில் இருந்தது. அது தற்போது 3363மெகா வாட்ஸாக அதிகரித்துள்ளது.
மஹிந்த சிந்தனை கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள “சகலருக்கும் எந்நேரமும் மின்சாரம்” என்ற வாக்குறுதியை யதார்த்தமாக்கி இலங்கை முழுவதும் 100 வீதம் மின்சாரத்தை துரிதமாக வழங்குவதற்கு ஜனாதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஒன்பது வருடங்களுக்குள் 17 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 2005 ஆண்டில் மின் பாவனையாளர்களின் எண்ணிக்கை 33,96,047 ஆக இருந்தது. அது தற்போது 50,03,789 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் மின் பாவனையாளர்களுக்கு மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
25 வீத மின் கட்டண குறைப்பினால் பாவனையாளர்களுக்கு நிவாரணம் கிடைப்பதோடு, மின்சாரத்துறையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் தற்போதைய அரசினால் முடிந்துள்ளது.
எதிர்காலத்தில் எரிசக்தி துறையில் ஏற்படக்கூடிய நெருக்கடி நிலைமையை தற்காலத்திலேயே கண்டு, அதற்காக நிரந்தர தீர்வை வழங்குவதற்கு 500 மெகாவாட்ஸ் கொண்ட சம்பூர் அனல் மின்சார நிலையத்தையும், 200 மெகாவாட்ஸ் கொண்ட மன்னார் காற்றாலை மின்சார நிலையத்தையும் நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது மீள் சுழற்சி மின்சார உற்பத்தி நிலையங்களில் 367 மெகாவாட்ஸ் மின்சாரம் தேசிய மின்சார கட்டமைப்புக்கு இணைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் முழு மின்சார தேவையில் 10 வீதமாகும்.
மேலும் மின் கட்டணம் குறைப்பு
மின் கட்டண குறைப்பு தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியதாவது,
அரசியல் நோக்கத்திற்காக அரசாங்கம் மின் கட்டணத்தை குறைக்கவில்லை. ஏற்கெனவே ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்தபடியே கட்டணம் குறைக்கப்பட்டது. எதிர்காலத்தில் மேலும் மின் கட்டணம் குறைக்கப்படும்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத் தினூடாக குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சம்பூர் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டம் எதிர்க ¡லத்தில் ஆரம்பிக்கப் பட்டதும் மேலும் கட்டணம் குறைக்க முடியும்.
25 வருடங்களுக்கு தனியார்துறையுடன் மின்சாரம் பெற ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தன. அவற்றினூடாக 42 ரூபா முதல் 60 ரூபா வரை ஒரு அலகு கொள்வனவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தங்கள் நிறைவடைந்து வருகிறது. அவை நீடிக்கப்படமாட்டாது.
மின் கட்டணத்துடன் அறவிடப்படும் எரிபொருள் சீராக்கல் கட்டணத்தில் மாற்றம் செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்படும்.