ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாகுமா? இன்று சர்வஜன வாக்கெடுப்பு
https://newsweligama.blogspot.com/2014/09/blog-post_58.html
பிரித்தானிய ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்ல வேண்டுமா என்பது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பில் ஸ்கொட்லாந்து மக்கள் இன்று வியாழக்கிழமை வாக்களிக்கவுள்ளனர்.
பிரித்தானிய பிரஜைகள், 52 பொதுநலவாய நாடுகளின் பிரஜைகள் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளில் ஸ்கொட்லாந்து பிராந்தியத்தில் வசிப்பவர்கள் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றலாம்.
ஸ்கொட்லாந்து பிரிந்து செல்ல வேண்டுமா என வாக்குச்சீட்டில் கேட்கப்பட்டிருக்கும். இதில் 'ஆம்' என பெரும்பாலான ஸ்கொட்லாந்து மக்கள் வாக்களித்தால், 2016 மார்ச் 24 ஆம் திகதி ஸ்கொட்லாந்து புதிய சுதந்திர நாடாகவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாக்களிப்பின் பெறுபேறுகள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய பிராந்தியங்களைக் கொண்ட சமஷ்டி நாடு ஐக்கிய இராச்சியம். 1707 ஆம் ஆண்டு இங்கிலாந்துடன் ஸ்கொட்லாந்து இணைக்கப்பட்டது.
பிரித்தானிய தீவின் வடபகுதியிலுள்ள ஸ்கொட்லாந்து சுமார் 78,387 சதுரகிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது. சுமார் 5,327,700 மக்கள் ஸ்கொட்லாந்தில் வசிக்கின்றனர். கடந்த 307 வருடங்களாக பிரிட்டனின் ஒரு பகுதியாக ஸ்கொட்லாந்து இருந்து வருகிறது. ஸ்கொட்லாந்தினதும் பிரிட்டனினதும் எதிர்காலம் இன்றைய வாக்களிப்பில் தங்கியுள்ளது.